குடிமகன்களின் கூடாரமாக மாறிய ஈசூர் ஊராட்சி அலுவலக கட்டடம்
சித்தாமூர்:சித்தாமூர் ஈசூரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் 'குடி' மகன்களின் கூடாரமாக மாறியுள்ளது.சித்தாமூர் அருகே ஈசூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது.நாளடைவில் கட்டடம் பழுதடைந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இ-சேவை மையத்திற்கு மாற்றப்பட்டு ஊராட்சி மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த கட்டடத்தில், அடிப்படை வசதிகள் இல்லை ,மேலும் கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், சேவைக்காக வரும் பொதுமக்கள் அமரவும் போதிய இடவசதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் , மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணைய நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது. 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் ஊராட்சி மன்ற கட்டடம் தற்போது இரவு நேரத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. கட்டடத்தில் உள்ள அறைகளில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே வீசிச் செல்கின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் ஊராட்சி மன்ற கட்டடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என , சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.