உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காட்டு விலங்குகளால் விவசாயிகள் அவதி மூன்று வனச்சரக அலுவலகங்கள் திறப்பு எப்போது?

காட்டு விலங்குகளால் விவசாயிகள் அவதி மூன்று வனச்சரக அலுவலகங்கள் திறப்பு எப்போது?

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மா வட்ட வனக்கோட்டத்தில், மூன்று வனச்சரகங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கான அலுவலகங்களை திறக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலக எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன.இந்த வனச்சரக கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு வனக்கோட்டத்தில், 17,088 ஹக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகளும், காஞ்சிபுரம் வனக்கோட்டத்தில், 3,384 .ெஹக்டேர் பரப்பளவில் காப்புக்காடுகளும் அமைந்துள்ளன.

காப்புக்காடுகள்

இவை மான், முயல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள், மயில் உள்ளிட்ட பறவைகளின் வாழ்விடமாக அமைந்துள்ளன. வனவிலங்குகள் மற்றும் காப்புக்காடுகளை பாதுகாக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதி. நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.இந்த பயிர்களை, வன விலங்குகளான காட்டுப்பன்றி உள்ளிட்டவை சேதப்படுத்தி வருகின்றன. மயில் உள்ளிட்ட பறவைகளால் சேதம் ஏற்படுகிறது.நெல் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தும் போது, அதற்கு இழப்பீடு தொகை பெறவும், வனப்பகுதியை ஒட்டி, 500 மீட்டர் தொலைவுக்கு வீட்டுமனைப் பிரிவு, தொழிற்சாலைகள் துவங்குவதற்கும், வனத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.வனப்பகுதி வழியாக, தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் செல்கின்றன.இந்த சாலைகளை அமைக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது.

காட்டுப்பன்றிகள்

மேலும், பயிர் இழப்பீட்டு தொகை பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள், உள்ளாட்சித் துறையினர், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளிட்டோரும், காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, செங்கல்பட்டு மாவட்டம், 2019ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி துவக்கப்பட்டது. அப்போது வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் இயங்கின. ஆனால், வனத்துறை மட்டும் பிரிக்கப்படாமல் காஞ்சிபுரத்தில் இருந்தது.இதனால், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்ததற்கு இழப்பீடு கோரி மனு அளிக்க, செங்கல்பட்டு விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்று வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு கால விரயம், பொருள் விரயம் ஏற்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தைப் பிரித்து, செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தைப் பிரித்து, செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் அமைக்க, கடந்த ஜன., 27ம் தேதி, அரசு உத்தரவிட்டது.செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலக எல்லைக்குள் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய சரகங்கள் தற்போது உள்ளன.இதில், திருக்கழுக்குன்றம், வண்டலுார், செய்யூர் ஆகிய பகுதிகளில், வனச்சரகங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு உள்ளன.செங்கல்பட்டில், செங்கல்பட்டு மாவட்ட வனக்கோட்ட அலுவலகம், கடந்த ஏப்., 1ம் தேதியில் இருந்து செயல்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், மாவட்ட வனக்கோட்ட அலுவலகம் துவக்கப்படாமல் உள்ளது. மூன்று வனச்சரக அலுவலகங்களும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், விவசாயிகள் இழப்பீடு பெற விண்ணப்பிப்பது போன்ற பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே திருக்கழுக்குன்றம், வண்டலுார், செய்யூர் ஆகிய மூன்று வனச்சரக அலுவலகங்களை திறக்க, வனத்துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் புதிதாக பிரிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில், மாவட்ட வன அலுவலகம் திறக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருக்கழுக்குன்றம், செய்யூர், வண்டலுார் ஆகிய பகுதிகளில், வனச்சரக அலவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.- வனத்துறை அதிகாரி, செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி