உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூண்டி கிராம ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

பூண்டி கிராம ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

திருப்போரூர்:பூண்டி கிராமத்திலுள்ள ஏரியை துார்வாரி சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமத்தில், 200 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் மூலமாக, 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இந்த ஏரியின் உபரி நீர், மற்ற நீர்நிலை களுக்கும் செல்கிறது. இந்த பெரிய ஏரி பல ஆண்டுகளாக, துார்வாரி சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் போதிய அளவு தண்ணீரை ஏரியில் சேமிக்க முடியாமல், வீணாகி வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் தொடர்ந்து நெல் பயிரிட முடியாமல் தவித்து வருகின்றனர்.எனவே, பூண்டி ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முறையாக துார்வாரி சீரமைத்து, கரையையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: பூண்டி கிராம ஏரி தண்ணீர் மூலமாக, மூன்று போகம் பயிரிடப்பட்டு வந்தது. ஏரியை துார்வாரி சீரமைக்காததால், தற்போது தண்ணீர் போதிய அளவு ஏரியில் தேங்குவதில்லை. இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் குறையும் அபாயம் உள்ளது. எதிர்கால தேவை கருதி, பூண்டி கிராம ஏரியை துார்வாரி சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி