ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் கோட்ட அளவில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், சப்- - கலெக்டர் நாராயணசர்மா தலைமையில், நேற்று நடந்தது. அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:ஆனுார் ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.குண்ணவாக்கம் ஏரியில் ஆக்கிரமித்து, தனிநபர்கள் சாலை அமைக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்தி, ஏரியை காப்பாற்ற வேண்டும் என, வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில், சாலை ஆக்கிரமிப்பு, பட்டா மாற்றம், மழைநீர் கால்வாய் துார் வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 25 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சப்- - கலெக்டர் நாராயணசர்மா உத்தரவிட்டார்.