ஜி.எஸ்.டி., - திருநீர்மலை சாலை சந்திப்பில் மாதக்கணக்கில் ஓடும் கழிவுநீரால் அவதி
பல்லாவரம்:பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., - திருநீர்மலை சாலை சந்திப்பில், பல மாதங்களாக வழிந் தோடும் கழிவுநீரால், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தினசரி பாதிக்கப்படுகின்றனர். பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில், பான்ட்ஸ் சிக்னலில் இருந்து திருநீர்மலை சாலை பிரிந்து செல்கிறது. ஜி.எஸ்.டி., - புறவழிச்சாலை - வெளிவட்ட சாலைகளை இணைப் பதால், தினசரி இதன் வழியாக ஏகப்பட்ட வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, நாகல்கேணி தோல் தொழிற்சாலைகள் மற்றும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைக்கு, மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இதன் வழியாகவே சென்று வருகின்றன. இதனால், 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ளது. இச்சாலையில், பான்ட்ஸ் சிக்னலில் இருந்து திருநீர்மலை சாலைக்கு திரும்பும் இடத்தில், சாலையோர கால்வாய் சேதமடைந்து, மாதக்கணக்கில் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. தினசரி கழிவுநீரிலேயே நீந்திச் செல்லும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அதில் தான் நடந்து செல்கின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் வாரி அடிக்கப்பட்டு, நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல் வோரும் கடுமையாக பாதிப்படைகின்றனர். நேற்று காலை அவ்வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் இருவர், கழிவுநீரில் தடுமாறி விழுந்து, எழுந்து சென்றனர். இப்பிரச்னை குறித்து பல முறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதே நிலை நீடித்தால், அப்பகுதியில் குடியிருப்போருக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடைந்த கால்வாயை சீரமைத்து, சாலையில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.