உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை புறநகர் பகுதிகளில் வீட்டு வாடகை... ஏறுமுகம் பேச்சுலர் களை குறிவைக்கும் உரிமையாளர்கள்

செங்கை புறநகர் பகுதிகளில் வீட்டு வாடகை... ஏறுமுகம் பேச்சுலர் களை குறிவைக்கும் உரிமையாளர்கள்

மறைமலை நகர் :செங்கல்பட்டு மாவட்டம் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நாளுக்கு நாள் வீட்டு வாடகை ஏறுமுகமாக உள்ளது. குடும்பத்தினரை தவிர்த்து, இளைஞர்களை குறிவைத்து வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்களும் அதிகரித்து வருகின்றனர். செங்கை புறநகர் பகுதிகளில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், ஊரப்பாக்கம் ,வண்டலுார், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த பகுதிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கி மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்த்து வருகின்றனர். அவதி நாளுக்கு நாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அந்த பகுதிகளில் வாடகைக்கு குடியேறுவது அதிகரித்து வருவதால் சொந்த வீடு வைத்திருப்போர் கவனம் இளைஞர்களை நோக்கி திரும்பி உள்ளது. இதன் காரணமான, வீடுகளின் வாடகை பல மடங்கு அதிகரித்து உள்ளதால் வாடகை வீட்டில் வசித்து குடும்பஸ்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து மக்கள் கூறியதாவது: புறநகர் பகுதியில் நாளுக்கு நாள் வாடகை அதிகரித்து வருகிறது. சமையல் அறை, ஒரு படுக்கையறை, வரவேற்பரை கொண்ட வீடு 5,000 - -8,000 ரூபாய் வரையும், இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகளுக்கு 10,000 வரை வாடகை வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இளைஞர்களுக்கு ஒருவருக்கு 1000 - 2500 என நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு வீட்டில் 8 பேர் வரை வாடகைக்கு விடுகின்றனர். புதிதாக வீடு கட்டுவோரும் 'பேச்சுலர்'களை குறி வைத்தே வீடு கட்டி வருகிறனர். இதன் காரணமாக,குடும்பமாக வசித்து வருவோருக்கு வீடுகள் கிடைக்காமல் பெரும் தொகையை வாடகைக்கு செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தோர் குறித்து எந்த தகவலும் இல்லாமல் வாடகைக்கு விட்டு வருகின்றனர். வாடகை விடும்போது வீட்டின் உரிமையாளர்கள் போலீசார் கூறும் எந்த வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.இதன் காரணமாக, வழிப்பறி,திருட்டு உள்ளிட்டவை புறநகர் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. எனவே வாடகை தொகை நிர்ணயம் மற்றும் வழிகாட்டி நெறிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். வீட்டின் உரிமையாளர்கள் கூறியதாவது: 'பேச்சுலர்'களுக்கு வீடு வாடகைக்கு விடும் போது அவர்கள் பெரும்பாலான நேரம் கம்பெனி அல்லது பொழுதுபோக்க சென்று விடுகின்றனர். இரவில் துாங்குவதற்காக மட்டுமே வீட்டிற்கு வருகின்றனர் . இதன் காரணமாக வீடு பராமரிப்பது சுலபமாக உள்ளது. இதுவே குடும்பத்தினருக்கு வாடகைக்கு விடும் போது தண்ணீர், கழிவுநீர், அக்கம்பக்கத்தினர் பிரச்னை உள்ளிட்ட பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். விசாரணை போலீசார் கூறியதாவது: சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் பகுதிகளில் வாடகை வீட்டில் வசிப்போர் அதிகளவில் உள்ளனர். வீட்டின் உரிமையாளர்களிடம் வாடகைக்கு விடும்போது அவர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வாங்கி வைக்க அறிவுறுத்தி உள்ளோம். பெரும்பாலானோர் அதை பின்பற்றுவது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் வங்க தேச இளைஞர்கள் இருவர் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மாதம் சிங்க பெருமாள் கோவில் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் அடித்து கொள்ளப்பட்டார். அவரை கொலை செய்த நபர்களும் அதே பகுதியில் வாடகைக்கு தங்கி இருந்தவர்கள் அவர்கள் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் வழக்குகள் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் செயின் பறிப்பு, பைக் மற்றும் மொபைல் போன் திருட்டு சம்பவங்களில் வெளியூரை சேர்ந்தவர்கள் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. எனவே வீட்டின் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை