விபத்தால் சிசிடிவிக்கள் சேதம் சீரமைத்து பொருத்த வலியுறுத்தல்
மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் முக்கிய சந்திப்பு பகுதிகளில், மக்கள் பிரதிநிதிகள், மதுராந்தகம் காவல் துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இதன் வாயிலாக, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச்செல்லும் நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய காவல் துறையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.கருங்குழி சந்திப்பு வழியாக, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலை ஆகும். இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை கடக்கும் பொதுமக்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.இதன் காரணமாக, அப்பகுதியில், நான்கு பக்கமும் காட்சிகள் பதிவு செய்யும் வகையில், தேசிய நெடுஞ்சாலையின் மைய தடுப்பு பகுதியில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.கடந்த, 20 நாட்களுக்கு முன் நடந்த வாகன விபத்தில், கருங்குழி பகுதியில், சாலையின் மையத்தடுப்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா சேதமடைந்தது.தற்போது வரை, கண்காணிப்பு கேமரா மீண்டும் பொருத்தப்படாமல், உடைந்து கேட்பாரற்று அப்படியே உள்ளது. இதனால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகன விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் நபர்களை கண்டறிவதில், காவல் துறைக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.எனவே, சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து, மீண்டும் புதிதாக பொருத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.