பாதை இல்லாத இடத்தில் பூங்கா பயன்படுத்த முடியாமல் வீண்
மறைமலை நகர்,மறைமலைநகர் நகராட்சி 20வது வார்டு ஸ்ரீவாரி நகரில் நகராட்சி சார்பில் அண்ணா பூங்கா இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்குகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளுடன் அமைக்கப்பட்டது. பூங்காவிற்க்கு செல்ல சாலைவசதி இல்லாததால் பூங்காவை சுற்றி மழைநீர் தேங்கியும், செடி கொடிகள் நிறைந்து வீணாகி வருகிறது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஸ்ரீவாரி நகர் வளர்ந்து வரும் பகுதி தற்போது புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை குறைவாக உள்ள இங்கு அடுத்தடுத்து இரண்டு பூங்காக்கள் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக செங்குன்றம் ஏரியில் இருந்து செல்லும் உபரி நீர் இந்த வழியாக செல்வதால் பல இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. முறையாக திட்டமிடல் இன்றி பூங்கா அமைக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்ததால் துருப்பிடித்து காணப்படுகிறது. எனவே பூங்காவை மேம்படுத்தவும், அங்கு சென்று வர பாதை அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.