மேலும் செய்திகள்
தெரு விளக்குகள் பராமரிப்பில் சிக்கல்
10-Jul-2025
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலத்தில், மின் விளக்குகள் இல்லாத தெருக்களில், புதிதாக எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில், 15 வார்டுகளைக் கொண்ட நான்காவது மண்டலத்தில் மேற்கு தாம்பரம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகள் உள்ளன. இதில், தாம்பரம் பகுதி நகராட்சியுடன் இருந்தது. பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை பகுதிகள், பேரூராட்சிகளாக இருந்தன. மாநகராட்சியுடன் இப்பகுதிகள் இணைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், பல தெருக்களில் மின்விளக்குகள் இல்லை. இதனால், குற்றச் செயல்கள் நடப்பதுடன், அப்பகுதியில் வசிப்போர் அதிக பாதிப்பிற்கு உள்ளாகினர். இந்நிலையில், இந்த தெருக்களில் புதிதாக மின் வடங்கள் அமைத்து, எல்.இ.டி., மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, 52 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 180 மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், 'எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, பெருங்களத்துார் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மகேந்திர பூபதி கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இன்னும் பல இடங்களில், பழைய 'சோடியம்' மின்விளக்குகளே உள்ளன. புதிதாக, '20 வாட்ஸ்' மின்விளக்குகள் பொருத்தப்பட்ட இடங்களில், போதிய வெளிச்சமின்றி அங்கு வசிப்போர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, நல்ல வெளிச்சம் வரும் வகையிலான மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
10-Jul-2025