மனைவியின் கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
செங்கல்பட்டு:மனைவியின் கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், தீர்ப்பளித்தது.சென்னை, பம்மல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 40. இவரது மனைவி ஷாமிலி.கடந்த 2013 ஜூன் 21ம் தேதி, குரோம்பேட்டை பத்மாவதி நகரிலுள்ள பாட்டி வீட்டிற்கு ஷாமிலி சென்றார். அப்போது அங்கு சென்ற சரண்ராஜ், மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த முருகன் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். தன் மனைவிக்கும், முருகனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வர, ஆத்திரமடைந்த சரண்ராஜ், 'செப்டிக் டேங்க்'கிற்கு பயன்படுத்தும் பீங்கான் குழாய் மற்றும் சிமென்ட் கலவை கற்களால் அடித்து, முருகனை கொலை செய்தார்.இதுகுறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண்ராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் வையாபுரி ஆஜரானார்.வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சரண்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதம் விதித்தும், கட்டத் தவறினால், மூன்று மாதம் சிறை தண்டனை விதித்தும், நீதிபதி சரவணகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.அதன் பின், சரண்ராஜை புழல் சிறையில், போலீசார் அடைத்தனர்.