உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகேந்திரா சிட்டி பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் ஷேர் ஆட்டோக்களால் அவதி

மகேந்திரா சிட்டி பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமிக்கும் ஷேர் ஆட்டோக்களால் அவதி

மறைமலை நகர்:மகேந்திரா சிட்டி பேருந்து நிறுத்தம் அருகில், சாலையை ஆக்கிரமித்து அணிவகுத்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், நிழற்குடை இல்லை. செட்டிபுண்ணியம், பகத்சிங் நகர், வடகால் கிராம மக்கள் தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர, இந்த பேருந்து நிறுத்தங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர், தினமும் பேருந்துகளில் மகேந்திரா சிட்டிக்கு வந்து செல்கின்றனர். மகேந்திரா சிட்டியில் இருந்து ஊரப்பாக்கம் வரை, 'டாடா மேஜிக்' எனப்படும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்கள், மகேந்திரா சிட்டி பேருந்து நிறுத்தத்தில் வரிசைகட்டி நின்று பயணியரை ஏற்றிச் செல்வதால், பேருந்துகளை நிறுத்தத்தில் நிறுத்த முடியாத நிலை தொடர்கிறது. இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: இந்த பகுதியில் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து, கடைகளின் விளம்பர பலகைகள், 'பொக்லைன்' இயந்திரங்கள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன், மாவட்ட நிர்வாகம் சார்பில், சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனாலும், சில நாட்களிலேயே புதிய ஆக்கிரமிப்புகள் முளைத்து விட்டன. இதன் காரணமாக பேருந்துகள் சாலை நடுவே நின்று, பயணியரை இறக்கிவிட்டுச் செல்கின்றன. எனவே, பெரும் அசம்பாவிதம் எற்படும் முன், மகேந்திரா சிட்டி பேருந்து நிறுத்தம் அருகில், சாலையை ஆக்கிரமித்து அணிவகுத்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை