வண்டலுார் ஊராட்சியில் கொசுமருந்து அடித்தல் தீவிரம்
வண்டலுார்:வண்டலுார் ஊராட்சியில், தெருக்கள்தோறும் கொசு மருந்து புகை அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, கொசு உற்பத்தி அதிகமாகி, பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.இதையடுத்து, கொசு மருந்து புகை அடிக்கும்படி, ஊராட்சி நிர்வாகத்திடம் பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த இரு நாட்களாக கொசு மருந்து புகை அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:வண்டலுார் ஊராட்சி 899 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள 232 தெருக்களுக்கும் கொசு மருந்து புகை அடிக்க, ஒரு இயந்திரம் மட்டுமே உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில், கூடுதலாக ஓர் இயந்திரம் வழங்கி, போதுமான ஊழியர்களை நியமித்து, சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை அனைத்து தெருக்களுக்கும் கொசு மருந்து புகை அடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.