மறைமலை நகர்: கடுமையாக சேதமடைந்துள்ள தாசரி குன்னத்துார் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தாசரி குன்னத்துார் கிராம சாலையை கொளத்துார், தாசரி குன்னத்துார் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பகுதிகளுக்குச் சென்று வர, இந்த சாலையே பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு, மோசமான நிலையில் உள்ளது. தற்போது, இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். கடந்த 2016ல், பிரதம மந்திரி சாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த சாலை, அதன் பின் சீரமைக்கப்படவில்லை. இந்த சாலையில் பேருந்து இயக்கப்படாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். சாலை மோசமாக உள்ளதால், அடிக்கடி ஜல்லிக் கற்கள் குத்தி டயர்கள் பஞ்சராகி விடுகின்றன. சாலையில், தற்காலிக சீரமைப்பு பணிகள் கூட நடப்பதில்லை. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சவாரி வர ஆட்டோக்கள் தயக்கம் வாகன ஓட்டிகள் கூறியதாவது: சாலையில் உள்ள பள்ளங்களால் முதியவர்கள், கர்ப்பிணியர், நோயாளிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த கிராமத்திற்கு வர தயங்குகின்றன. மேலும், இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே இந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.