இரும்புலி ஊராட்சிக்கு புது அலுவலக கட்டடம்
சித்தாமூர், சித்தாமூர் அருகே இரும்புலி ஊராட்சியில், கடந்த 20 ஆண்டுகளாக, பழுதடைந்த கட்டடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது.இதையடுத்து, கடந்த சில மாதங்களாக, கிராம சேவை மைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, ஊராட்சி மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த கட்டடத்தில், அடிப்படை வசதிகள் இல்லை. கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், சேவைக்காக வரும் பொதுமக்கள் அமரவும் போதிய இடவசதி இல்லாமல், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மாநில நிதி ஆணையம் மற்றும் மத்திய நிதி ஆணையம் நிதியின் கீழ், 30 லட்சம் மதிப்பீட்டில், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. 70 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.