சிங்கபெருமாள் கோவிலில் தேங்கும் கழிவுநீரால் பாதசாரிகள் அதிருப்தி
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வங்கி, மருத்துவமனை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு, சிங்கபெருமாள் கோவிலுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.இங்கு ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து மண்டப தெரு செல்லும் சந்திப்பில், சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை மற்றும் கழிவு நீர் தேங்கி உள்ளது.இதன் காரணமாக, கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:இந்த பகுதியில் தேங்கும் குப்பை காரணமாக, கொசுக்கள் அதிகரித்து உள்ளன. அருகில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணியர், துர்நாற்றம் காரணமாக மூக்கை பொத்தியபடி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.பள்ளி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கழிவுநீரை மிதித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையைச் சுற்றி, பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது.எனவே, இந்த பகுதியை சுத்தம் செய்து, நோய் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.