உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் ஓடும் நீர்ப்பாசன கால்வாயை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

கழிவுநீர் ஓடும் நீர்ப்பாசன கால்வாயை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

மறைமலை நகர்:மறைமலை நகரில், கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ள நீர்ப்பாசன கால்வாயை, துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி 6வது வார்டில் ராஜாஜி தெரு, சாந்தா நகர், செல்லியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. புதிதாக பல்வேறு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில், காட்டாங்கொளத்துார் ஏரியில் இருந்து வரும் நீர்ப்பாசன கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளதால், இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் வரை, காட்டாங்கொளத்துார் ஏரியில் இருந்து நீர்ப்பாசன கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டது. நகரமயமாக்கல் காரணமாக, தற்போது இங்கு வீடுகள் அதிகரித்துள்ளன. இந்த நீர்ப்பாசன கால்வாய் தற்போது, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து, கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அத்துடன், பிளாஸ்டிக் குப்பை கால்வாயில் குவிந்து, கழிவுநீர் செல்ல வழியின்றி பாதிப்பு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இந்த கழிவுநீர், வீடுகளின் ஆழ்துளை கிணறுகளில் கலந்து, தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து, மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த கால்வாயை துார்வாரி, கான்கிரீட் கால்வாயாக அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை