நோ பார்க்கிங்கில் வாகனங்கள் போலீசார் அபராதம் விதிப்பு
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். வார இறுதி, விடுமுறை உள்ளிட்ட நாட்களில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வருகின்றன. அவை பிரதான சாலை பகுதிகளில் நிறுத்தப்படுவதால், கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இச்சூழலில், சப் - கலெக்டர் நாராயணசர்மா அறிவுறுத்தி, மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார், பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, நோ பார்க்கிங் பகுதிகளை கண்டறிந்தனர். அங்கு வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், மீறுவோருக்கு அபராதம் விதிப்பதாகவும் எச்சரித்து, அறிவிப்பு பலகை அமைத்துள்ளனர். நேற்று விடுமுறை தினத்தில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்த நிலையில், நோ பார்க்கிங் பகுதிகளில், அவற்றை நிறுத்தியிருந்தனர். அவற்றை கண்டறிந்து, 20 பேருக்கு தலா 500 ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் போலீசார் அபராதம் விதித்தனர்.