உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எதிர்ப்பை மீறி கட்டப்பட்டு வந்த கலையரங்கம் இடித்து அகற்றிய போந்துார் கிராம மக்கள்

எதிர்ப்பை மீறி கட்டப்பட்டு வந்த கலையரங்கம் இடித்து அகற்றிய போந்துார் கிராம மக்கள்

சித்தாமூர்:போதுார் ஊராட்சியில், எதிர்ப்பையும் மீறி கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் கட்டப்பட்டு வந்த கலையரங்கத்தை, கிராம மக்கள் இடித்து அகற்றினர். சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போந்துார் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன், கங்கையம்மன், கன்னியம்மன் உள்ளிட்ட கோவில்களில், விழாக்காலங்களில் கலை நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள் மற்றும் தெருக்கூத்துகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், போந்துாரில் கலையரங்கம் இல்லை. எனவே, கோவில்களை ஒட்டியுள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கலையரங்கம் கட்ட வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 6 லட்சம் ரூபாயில் கலையரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஓரிடத்தில் கலையரங்கம் கட்டுமான பணிகள் துவங்கின. கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் கலையரங்கம் கட்டினால், இரவு நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் போது, வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடக்கும். இதனால், அங்கு கட்டக்கூடாது என, கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்தன. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 9:30 மணியளவில், கலையரங்கம் கட்டுமானத்தை இடித்து அகற்றினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை