உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள்... இழுத்தடிப்பு : போக்குவரத்திற்கு வழியின்றி 25 கிராமத்தினர் தவிப்பு

ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள்... இழுத்தடிப்பு : போக்குவரத்திற்கு வழியின்றி 25 கிராமத்தினர் தவிப்பு

செங்கல்பட்டு:ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே, ரயில்வே மேம்பால பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளாகியும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இந்த இழுத்தடிப்பு காரணமாக, 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர், போக்குவரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துார் இடையே, ரயில்வே கடவுப்பாதை உள்ளது. பொன்விளைந்தகளத்துார், ஒத்திவாக்கம், ஆனுார், வல்லிபுரம், பூதுார் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த ரயில்வே கடவுப்பாதையை கடந்து பள்ளி, கல்லுாரி, அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர். அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை, இந்த கடவுப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். Galleryவாகன போக்குவரத்து அதிகரித்த நிலையில், அடிக்கடி ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதை கட்டுப்படுத்த மேம்பாலம் கட்டித்தர மத்திய, மாநில அரசுகளிடம் கிராமவாசிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ரயில்வே துறையினர், கடவுப்பாதை வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதை உறுதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு - ஒத்திவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, 2011-12ம் ஆண்டு, 30.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரயில்வே துறை, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், தண்டவாளப் பகுதியில் மேம்பாலப் பணியை முடித்தது. மீதமுள்ள பணிகளுக்கு, 2018ம் ஆண்டு, 33.24 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசு அனுமதி வழங்கியது. இப்பணிக்கு, 2022ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதே ஆண்டு ஆகஸ்டில், மேம்பாலப் பணிக்கு 26.58 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது. இப்பணியை, 2023ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். ரயில்வே கடவுப்பாதையில், திருக்கழுக்குன்றம் சாலையில் மேம்பாலப் பணி முடிவுற்று, மற்ற பணிகள் நடைபெறாமல் உள்ளன. ஒத்திவாக்கம் பகுதியில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பணிகள் துவங்கி மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ரயில்வே நிர்வாகம், ரயில்வே கடவுப்பாதையில் உள்ள மேம்பாலத்துடன் மற்ற பால பகுதியை இணைக்கும் பணிக்கு, நெடுஞ்சாலைத் துறை கட்டுமான பிரிவுக்கு அனுமதி வழங்கியது. இதன்படி, ஒத்திவாக்கம் பகுதியில் மேம்பாலப்பணி மற்றும் ரயில்வே கடவுப்பாதையில் உள்ள ரயில்வே மேம்பாலத்துடன் மற்ற பாலத்தை இணைக்கும் பணிகள் துவங்கி, மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இந்த இழுத்தடிப்பு காரணமாக, மழை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் சுற்றுப்பகுதி கிராமத்தினர், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நலன் கருதி, பாலப்பணியை விரைந்து முடிக்க, கலெக்டர் சினேகா நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிந்து, வரும் நவம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். -நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு. ரயில்வே மேம்பாலப் பணி நடைபெறும் பகுதி வழியாக, தண்டவாளம் அருகில் இருசக்கர வாகனம், ஆட்டோவில் சுற்றுப்பகுதி கிராமத்தினர் சென்று வருகின்றனர். மழை பெய்யும் நேரத்தில், பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, விபத்துகளில் சிக்கி படுகாயமடைகின்றனர். தண்டவாளம் அருகே செல்லும் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.ஏ.தமிழ்ச்செல்வன், சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ