தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் வயலில் அறுவடை செய்வதில் சிக்கல்
சித்தாமூர்:தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளால், விவசாய பகுதிகளுக்கு இயந்திரங்களை ஓட்டிச்செல்ல வழியின்றி வயலில் அறுவடை காலத்தில் சிரமம் ஏற்படுவதாக, கல்பட்டு கிராம விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். சித்தாமூர் அடுத்த, கல்பட்டு கிராமத்தில், ஏரிக்கரை அருகே 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயம் செய்யப்படுகிறது. விவசாய பயன்பாட்டிற்காக, இங்குள்ள நிலங்களில் கம்பங்கள் நட்டு, கம்பிகள் வழியே மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மின் கம்பிகள், பல இடங்களில் தாழ்வாக தொங்குவதால், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை ஓட்டிச் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், பயிர் அறுவடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்போது, மின் வாரியத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின், வேலை செய்ய வேண்டியதாகிறது என, கிராம விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்வதால், விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்கும் படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.