பி.டி.ஓ., ஆபீஸ் கட்டடம் பாழ்; இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியம், 59 ஊராட்சிகளை உள்ளடக்கியது. அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், அப்போதைய முதலமைச்சர் காமராஜரால், 1962ல் திறக்கப்பட்டது.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. கட்டடம் பழமையானதால், மழைக் காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு, ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமம் இருந்து வந்தது.இதனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், புதிதாக வட்டார வளர்ச்சி அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு, தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பழைய கட்டடம் பயன்பாடு இன்றி உள்ளதால், அப்பகுதியினர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தை இடித்து அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.