மழைநீரால் குடைவரை பாதிப்பு உட்புற விரிசல்கள் அடைப்பு
மாமல்லபுரம்மாமல்லபுரம் பாண்டவர் குடைவரையில் மழைநீர் பெருக்கெடுக்காமல் தடுக்க, உட்புற விரிசல்கள் அடைக்கப்பட்டன.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் சிற்பங்களை, தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கிறது.அவற்றில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், பாரம்பரியமான நடைமுறையில் சுண்ணாம்பு கலவை தயாரித்து புனரமைக்கிறது. அர்ஜுனன் தபசு சிற்பத்தை ஒட்டியுள்ள பாண்டவர் குடைவரையில், கனமழை பெய்யும் போது மட்டும், குடைவரை உட்புறம் மழைநீர் புகுந்து பெருக்கெடுத்தது.வருங்காலத்தில் குடைவரை மேல்தளத்தில், விரிசல் மேலும் விரிவடைந்து, சிற்ப குடைவரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, குடைவரை அமைந்துள்ள பாறைக்குன்றின் மேற்பரப்பில், நீண்ட காலத்திற்கு முன் ஏற்பட்ட விரிசல் பகுதிகளை கண்டறிந்தனர்.அதில் சுண்ணாம்பு, நுண்கற்கள், கசிவு தடுப்பு ரசாயன திரவம் ஆகியவற்றின் கலவையை நிரப்பினர். விரிசல் பகுதிக்கு மழைநீர் வராமல் தடுக்க, சிறிய கல்தடுப்பு அமைக்கப்பட்டது. அதற்கும் கட்டுப்படாமல் மழைநீர் குடைவரைக்குள் தொடர்ந்து பெருக்கெடுக்கிறது. இதையடுத்து, உட்புற விரிசல்களிலும் தற்போது சுண்ணாம்புக் கலவை நிரப்பி அடைத்தனர்.