வில்லியம்பாக்கம் சாலையில் இருள் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் - சாஸ்திரம்பாக்கம் சாலை, 6 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலை.இந்த சாலையை வெண்பாக்கம், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில், சாஸ்திரம்பாக்கம் எல்லையில் இருந்து வில்லியம்பாக்கம் இடையே ஒரு கி.மீ., துாரம் மின் விளக்குகள் இல்லை. இதனால், இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலும் இருசக்கர வாகனங்களே அதிக அளவில் சென்று வருகின்றன. தினமும் மாலை நேரங்களில், இந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் இந்த சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நுாற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்..இந்த பகுதியில் இருள் சூழ்ந்துள்ளதால், சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்கள் இருப்பது தெரியாமல், விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.மேலும், இந்த பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட சாலை வளைவுகள் உள்ளதால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். எனவே, இந்த சாலையில் விளக்குகள் இல்லாத பகுதியில் மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.