இருள் சூழ்ந்த கொண்டங்கி சாலை மின் விளக்கு அமைக்க வேண்டுகோள்
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் - கொண்டங்கி சாலை, 10 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, மருதேரி, கருநிலம், கோவிந்தபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.நெல்லிக்குப்பம் - திருப்போரூர் சாலையின் இணைப்பு சாலையான இதில், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.இந்த சாலையில், கருநிலம் கிராம எல்லை முடிவில் இருந்து, கொண்டங்கி வரை மின் விளக்குகள் இல்லாததால், இருளில் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையை, அதிக அளவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் விளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரத்தில் சென்று வர சிரமமாக உள்ளது. மேலும், ஊரைக் கடந்த பின், சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் மற்றும் ஏரி உள்ளது. சில நேரங்களில், இப்பகுதியில் தனியே வருவோரை மடக்கி மர்ம நபர்கள் மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்துச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.எனவே, இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.