பழமையான குடிநீர் கிணற்றுக்கு இரும்பு வலை அமைக்க கோரிக்கை
மதுராந்தகம்:குன்னங்குளத்துாரில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு இரும்பு வலை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியம், நெல்லி ஊராட்சிக்கு உட்பட்ட குன்னங்கொளத்துார் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவைக்காக, குன்னங்கொளத்துார் பகுதி முன்னோர்களால், கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் கிணறு வெட்டப்பட்டு, துாய்மையான குடிநீர் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை, இந்த கிணற்று நீரை குடிநீருக்கும் சமையல் செய்வதற்கும், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், குடிநீரின் தேவை அறிந்து, குடிப்பதற்கு மட்டும் சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் கிணறு உள்ளதால், இங்கு விளையாடும் குழந்தைகள் தவறி கிணற்றில் விழும் அபாயம் நிலவுகிறது. அதனால், அசம்பாவிதம் ஏற்படும் முன், கிணறுக்கு இரும்பு வலை அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.