அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
செங்கல்பட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இங்கு, தினமும் புறநோயாளிகள் 3,000க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.இதுமட்டுமின்றி, உள் நோயாளிகளின் உறவினர்களும், மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, அரசு மருத்துவமனை பகுதியில், சாலையின் இருபுறமும் பயணியர் நிழற்குடைகள் உள்ளன. இங்கு, நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள், நோயாளிகள் தங்களின் சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர்.தற்போது, கோடை வெயில் அதிகரித்துள்ளதால், மக்களுக்கு குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. ஆனால், பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் இல்லாததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடைகளில் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் இங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.