உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காப்புகாடுகளில் வன விலங்குகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

காப்புகாடுகளில் வன விலங்குகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் சுற்றியுள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காப்புகாடுகள் உள்ளன. இந்த காப்புகாடுகளில் மயில்கள், மான், முள்ளம்பன்றி, உள்ளிட்ட அறியவகை உயிரினங்கள் உள்ளன. தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் சுற்றி திரிகின்றன. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அனுமந்தபுரம், கொளத்துார், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் அரியவகை வன உயிரினங்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் சுற்றியுள்ள நீர்நிலைகளான ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி சேறாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் தேடி அலையும் நிலை உருவாகி உள்ளது.கடந்த ஆண்டு பனங்கொட்டூர் ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற புள்ளிமான் சேற்றில் சிக்கி உயிரிழந்தது.வனத்துறை சார்பில், கொளத்தூர் கிராம வன பகுதியில் 2017ம் ஆண்டு வன விலங்குகள் தண்ணீர் குடிக்க சிமென்ட் தொட்டி அமைக்கப்பட்டது.சுற்றியுள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கும் போது தொட்டியில் தண்ணீர் உள்ளது. கோடையில் வற்றி காய்ந்து விடுகிறது. எனவே வனப்பகுதியில் பல இடங்களில் தொட்டி அமைத்து தண்ணீர் வைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை