சேதமான சிமென்ட் சாலை சீரமைக்க கோரிக்கை
மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திருவடிசூலம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பழமையான ஞானபுரீஸ்வரர் சமேத கோவர்தனாம்பிகை கோவில் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள பிரதான சிமென்ட் சாலை கடந்த சில மாதங்களாக பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:திருவடிசூலம் செல்லும் பிரதான சாலையில் 200 மீட்டர் துாாரம் சாலை பெயர்ந்து ஜல்லி கற்கள் பரவலாகி காணப்படுகிறது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பைரவர், கருமாரியம்மன், சிவன் கோவில்களுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.