உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெடுங்கல் -- மின்னல் சித்தாமூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

நெடுங்கல் -- மின்னல் சித்தாமூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்,:மின்னல் சித்தாமூர் -- நெடுங்கல் செல்லும் கிராம சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஒரத்தி -- தொழுப்பேடு மாநில நெடுஞ்சாலையில், மின்னல் சித்தாமூர் பகுதியில் இருந்து பிரிந்து, நெடுங்கல் ஊராட்சிக்கு செல்லும் கிராம சாலை உள்ளது. இந்த சாலையை நெடுங்கல், முருங்கை, கொங்கரை மாம்பட்டு, களத்துார் முன்னக்குளம், சிறுதாமூர், அல்லுார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை, 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, பருவமழையில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், இந்த சாலையில் அமைக்கப்பட்ட சிறு பாலம் மண் அரிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாதவாறு சாலை துண்டிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்காலிகமாக பாலம் அமைத்து, மேற்பகுதியில் மண் கொட்டி சமன் செய்து, வழி ஏற்படுத்தி உள்ளனர். இதனால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், இப்பகுதியில் ஆய்வு செய்து, சாலை மற்றும் சிறுபாலம் அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை