குறுகலா௳ன நெல்வாய்பாளையம் சாலை அகலப்படுத்த வேண்டுகோள்
செய்யூர்: செய்யூர் - நெல்வாய்பாளையம் இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை குறுகலாக உள்ளதால், அகலப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்யூர் அருகே வடக்கு செய்யூர் சாலை சந்திப்பில் இருந்து நெல்வாய்பாளையம் செல்லும் 10 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது. இது மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பெரும்பாக்கம், மடையம்பாக்கம், வீரபோகம், ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது. செய்யூர், பவுஞ்சூர், கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் என, ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் ஆக்கினாம்பட்டு, சிறுவங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு, தினமும் வந்து செல்லும் ஏராளமான லாரிகள், இந்த சாலை வழியாகவே கடந்து செல்கின்றன. தற்போது அமைக்கப்பட்டு உள்ள தார்ச்சாலை 3.75 மீட்டர் அகலம் மட்டும் உள்ளதால், எதிர் எதிரே வரும் கனரக வாகனங்கள் மோதிக்கொண்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வடக்கு செய்யூரில் வளைவுப் பகுதிகளில், சாலையோர தடுப்பு இல்லாமல் குறுகலாக உள்ளதால், வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பீதியில் சென்று வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் - நெல்வாய்பாளையம் சாலையை இருவழிப் பாதையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.