ஓதியூரில் புதிய அங்கன்வாடி பகுதிவாசிகள் வலியுறுத்தல்
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள கங்கையம்மன் கோவில் எதிரே, அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.இதில், 15 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 23 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.அங்கன்வாடி மையம் செயல்படும் கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால், மழைக் காலத்தில் தண்ணீர் ஒழுகி, குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஓதியூர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.