மானாமதியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. மானாமதி ஊராட்சியில் அடங்கிய மானாமதி, சந்தினாம்பட்டு, அகரம், பெரியார் நகர், தட்சிணாவர்த்தி, ஈச்சம்பள்ளம், குயில்குப்பம், ஆனந்தபுரம் ஆகிய கிராமங்களில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, போர்க்கால நடவடிக்கையாக, மானாமதி ஏரியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:மானாமதி ஊராட்சியில் அடங்கிய கிராமங்களுக்கு, அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது.கோடை காலத்தில், பொதுமக்கள் வசிக்கும் பகுதி மற்றும் அரசு அலுவலகங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.பல கி.மீ., துாரம் நடந்து சென்று, தண்ணீர் எடுத்து வரும் நிலைமை உள்ளது.திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதிக்கு, பல கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதேபோல, மானாமதியிலும் செயல்படுத்த வேண்டும். மானாமதி ஏரி, 500 ஏக்கர் பரப்பளவு உடையது.மழைக்காலங்களில் ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர், வீணாக கடலில் சென்று கலக்கிறது.மானாமதி ஏரியிலும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்தினால், இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. வீணாக கடலில் கலக்கும் மழை நீரையும் தடுக்கலாம்.இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தால், அனைத்து கிராமங்களுக்கும், 24 மணி நேரமும் குடிநீர் வழங்க முடியும். தமிழக அரசு, மானாமதி ஏரியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.