சிறுதாவூர் அரசு உயர்நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.2.26 கோடி
திருப்போரூர்:சிறுதாவூர் அரசு உயர்நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட, 2.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாததால் வகுப்பறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், கூடுதலாக புதிய கட்டடம் கட்ட முடியாமல், ஏற்கனவே இருந்த கட்டடங்களில் வகுப்புகள் நடந்து வந்தன.இந்நிலையில், இப்பள்ளிக்கு போதிய இடம் ஒதுக்கி, புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் என, கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, இந்த பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி, சிறுதாவூர் ஊராட்சி தலைவர் அருள், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜியிடம் கோரிக்கை வைத்தார். எம்.எல்.ஏ.,வும் அமைச்சர்கள், கலெக்டரிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, உயர்நிலைப் பள்ளிக்கு இடத்தை ஒதுக்க வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் சர்வே எண் 458/6 முதல் 458/12 வரையில் அடங்கிய 1.42 ஏக்கர் பரப்பளவு இடம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, ஊராட்சி மன்ற தீர்மானம், சிறுதாவூர் கிராம நிர்வாக அலுவலர், திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., - டி.ஆர்.ஓ., மாவட்ட கலெக்டர் ஆகியோரின் ஆய்வு அறிக்கைகள், நில நிர்வாக ஆணையருக்கு சமர்ப்பிக்கப்பட்டன. நில நிர்வாக ஆணையர் இந்த நிலத்தை, பள்ளி கட்டடம் கட்டும் வகையில், கல்வித்துறைக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், புதிய கட்டடம் கட்ட, 2.26 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.