உங்களுடன் ஸ்டாலின் மண்ணிவாக்கத்தில் முகாம்
மண்ணிவாக்கம்:மண்ணிவாக்கத்தில், இரண்டாம் கட்டமாக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடைபெற்றது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர், கோரிக்கை மனுக்கள் அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சியில், 12 வார்டுகளில் உள்ள, 295 தெருக்களில் 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஜூலை 15ம் தேதி, மகளிர் சுய உதவிக் குழு அரங்கில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்த போது, 2,000க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, அதே இடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், நேற்று நடத்தப்பட்டது. காலை 9:00 மணிக்கு துவங்கி, மாலை 3:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், தமிழக அரசின் 40 துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் மற்றும் புதிய அட்டை விண்ணப்பித்தல் என, ஆதார் அட்டை சேவைக்காக 200க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். தவிர, மகளிர் உரிமைத் தொகையில் பெயரை இணைக்க, புதிய ரேஷன் கார்டு பெற, மின் இணைப்பு பெயர் மாற்ற, சிறு தொழில் கடன் பெற, விவசாய தொழில் கடன் பெற என, பிற துறைகளின் சேவைகளைப் பெற, 800க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி தலைமையில், அக்கட்சியை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.