உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடகால் ஏரியில் இருந்து மண் எடுக்க உரிமம் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு

வடகால் ஏரியில் இருந்து மண் எடுக்க உரிமம் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு

செங்கல்பட்டு:வடகால் கிராம ஏரியில் இருந்து மண் எடுத்தால், மழைக்காலங்களில் கடும் பாதிப்பு ஏற்படும். இதனால், மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்கியதை நிறுத்த வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம், ஆத்துார் ஊராட்சியில், வடகால் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கு திருக்கச்சூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக வரும் போது, இந்த கிராமம் தீவு போல் காட்சியளிக்கும். இந்நிலையில், தற்போது வடகால் ஏரியிலிருந்து மண் எடுக்க, கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து தனியார் ஒப்பந்ததாரர்கள், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக, ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்து, கிராமத்தினர் அங்கு சென்று, தடுத்து நிறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் சினேகாவிடம், கடந்த 14ம் தேதி வடகால் கிராமத்தினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நேற்று, சமாதான கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, வடகால் கிராமத்தினர் கூறுகையில்,'எங்கள் கிராம ஏரியில் மண் எடுத்தால், மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக வரும் போது, ஏரிகரை உடையும் சூழல் உள்ளது. இதனால், ஏரியில் மண் எடுக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' என்றனர். அதன் பின், 'உங்கள் கோரிக்கை கலெக்டர், சப் - கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும்' என, கிராமத்தினரிடம் தாசில்தார் தெரிவித்தார். அதன் பின், வடகால் கிராமத்தினர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ