உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செங்கை, காஞ்சியில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி சரிவு!

 செங்கை, காஞ்சியில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி சரிவு!

செங்கல்பட்டு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ஆண்டுதோறும் கரும்பு சாகுபடி குறைந்து வருகிறது. அதனால், படாளத்தில் அமைந்துள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுக்கு 3 லட்சம் டன்னுக்கு மேல் இருந்த அரவை, தற்போது, 2 லட்சத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. அதனால், அரவைக்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, படாளம் பகுதியில், 1960ல் அப்போதைய முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்டது. அப்போது, இந்த சர்க்கரை ஆலையின் சாகுபடி பரப்பளவு, 12,000 ஏக்கர்.துவக்கத்தில், நாள் ஒன்றுக்கு 750 டன் அரவைத்திறன் கொண்டது. முதல் ஆலை விரிவாக்கதின் போது, 1,750 டன்னாகவும், 1994 - -95ல், 2,100 டன்னாவும் விரிவாக்கம் செய்யப்பட்டது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, இந்த ஒரு சர்க்கரை ஆலை மட்டுமே உள்ளது. இந்த ஆலை புதிதாக துவங்கப்பட்ட போது, இரு மாவட்டத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள் பொருளாதாரரீதியாக வளர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கும் ஆலையில் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைத்தது.நல்ல முறையில் இயங்கி வந்த ஆலையில், 1994 - -95 காலகட்டத்தில் சரிவு துவங்கியது. இந்த ஆலைக்கு உரிய சாகுபடி நிலங்களான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாத்தனஞ்சேரி பிர்கா உட்பட குறிப்பிட்ட பகுதிகளை பிரித்து, சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்டது.தனியாருக்கு பிரித்து கொடுக்கும் முன், ஆண்டுக்கு 3 - 3.5 லட்சம் டன் அரவை கொண்ட படாளம் ஆலை, படிப்படியாக அரவை குறைந்து 2000 - 01ல் மூடப்பட்டது.விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம், கோரிக்கையை ஏற்று, 10 ஆண்டுகளுக்கு பின், 2010ல், அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால், படாளம் சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.இதற்கிடையில், 2015ல் சங்கராபுரம் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால், தனியாருக்கு கொடுக்கப்பட்ட சாகுபடி நிலத்தை சேர்ந்த விவசாயிகள், மீண்டும் 2016 முதல் படாளம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் வழங்கி வருகின்றனர்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், நகரமயமாக்கல் காரணமாக விவசாயம் குறைந்து வருகிறது. அதிலும், கரும்பு விவசாயிகள், நெல் உள்ளிட்ட மாற்று பயிர்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்டுக்கு, 3 லட்சம் மெட்ரிக் டன் அரைத்த ஆலை, தற்போது 2 லட்சம் மெட்ரிக் டன் அரவைக்கு கரும்பு வருவது அபூர்வமாக உள்ளது. இதனால், அரசின் உத்தரவுடன் வெளி மாவட்டங்களில் இருந்து கரும்புகள் கொண்டு வந்து அரைக்கப்படுகிறன. இந்த ஆலைக்கு உட்பட்ட சாகுபடி நிலங்களில், தற்போது 4,395 ஏக்கரில் மட்டுமே கரும்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:வெட்டுக்கூலி, வண்டி வாடகை, கட்டுபடியாகாத கரும்பு விலை இவற்றால், கரும்பு விவசாயிகள் மாற்று பயிர்களை நோக்கி செல்கின்றனர். கரும்புக்கு விலையும், இரு தவணைகளாக வழங்கப்படுகின்றன.மத்திய அரசு வழங்கும் டன்னிற்கு 2,919.45 ரூபாய், ஆலையில் கரும்பு போட்டு ஒரு மாதத்தில் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.ஆனால், மாநில அரசின் ஊக்க தொகை, 195 ரூபாய் ஏழு மாதங்கள் வரை காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை, ஆண்டுதோறும் மாற்றம் அடையும்.இது போன்ற காரணங்களால், விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழகம் முழுதும் கரும்பு சாகுபடி குறைந்து வருகிறது. வெட்டு கூலியும் அதிகரித்துள்ளது. ஆலையில் 12 கரும்பு வெட்டும் இயந்திரங்கள் கொடுத்த போதிலும், ஆட்களும் தேவைப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளை, வெளி மாவட்டத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் மேஸ்திரிகள் ஏமாற்றி விட்டனர். எனவே, சர்க்கரை ஆலை நிர்வாகமே கூலி ஆட்களை நியமித்து, கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். - எஸ்.தனபால், தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர், காஞ்சிபுரம் மாவட்டம்.

ஆலைக்கு உட்பட்ட கோட்டங்கள்

செங்கல்பட்டு, உத்திரமேரூர், சீத்தனஞ்சேரி, படாளம், பவுஞ்சூர், மதுராந்தகம், மேல்மருவத்துார், திருக்கழுக்குன்றம், திண்டிவனம் உள்ளிட்ட ஒன்பது கோட்டங்களில் இருந்து, துவக்கத்தில் இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், 2010 முதல் விழுப்புரம் மாவட்டம், வானுார் கோட்டத்தில் இருந்து கரும்பு கொண்டு வரப்படுகிறது.

மத்திய குழுவினர் ஆய்வு

படாளம் சர்க்கரை ஆலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும், விலை பொருட்களின் உற்பத்தி செலவுகளை ஆய்வு செய்து, குறைந்தபட்ச ஆதார விலையை பரிந்துரை செய்வதற்கு என உள்ள ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இரு நாட்களுக்கு ஆய்வு செய்தனர்.அதில், ஆலையின் முன்னோடி கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கரும்பு சாகுபடியில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் சிரமங்களை, அவர்கள் எடுத்துரைத்தனர்.குறிப்பாக, கரும்பிற்கான உற்பத்தி செலவு குறித்து கூறி, லாபகரமான ஆதார விலையை பரிந்துரை செய்ய வேண்டும் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.இதில், சர்க்கரைத்துறை கூடுதல் இயக்குநர் பாலமுருகன், தலைமை சர்க்கரை பொறியாளர் பிரபாகர், தலைமை பெருக்கு அலுவலர் வெற்றிவேலன், வேளாண் இணை இயக்குநர் கரும்பு முத்துராமன் உள்ளிட்ட ஆலையின் அலுவலர்கள் மற்றும் கரும்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை