பொது இடத்தில் கொடி கம்பங்கள் அகற்ற தாசில்தார் அறிவுறுத்தல்
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை அகற்றுமாறு, தாசில்தார் ராதா அறிவுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் ஆகியவற்றின் கொடி கம்பங்கள், சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளன. இவை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. அரசியல் கட்சியினர் மோதலில், ஒரு கட்சி கொடியை, மற்ற கட்சி தரப்பினர் சேதப்படுத்தி, கம்பங்களை உடைக்கின்றனர். இதனால், பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையில், பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றுமாறும், தனியார் இடத்தில் உரிய அனுமதி பெற்று அமைக்கலாம் என்றும், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா நேற்று, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி மற்றும் பேரூராட்சி, மாமல்லபுரம் நகராட்சி ஆகிய நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்தினார்.அப்போது அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொது இடங்களில் அமைத்துள்ள கொடி கம்பங்களை, தாமாக விரைந்து அகற்றுமாறு அறிவுறுத்தினார். அகற்ற தவறினால், உள்ளாட்சி நிர்வாகங்கள் அகற்றும் என்றும் தெரிவித்து உள்ளார்.