கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற தாசில்தார் உத்தரவு
திருப்போரூர்:திருப்போரூர் தாலுகா பகுதிகளில், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றுமாறு, தாசில்தார் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்ற அனைத்து உள்ளாட்சி அதிகாரகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி திருப்போரூர் தாலுக்காகாவிற்குட்பட்ட பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றுவதற்கான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் நடராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீசார், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.இதில், பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கட்சி கொடிக்கம்பங்களை கட்சியினர் தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும் என, தாசில்தார் நடராஜன் கூறினார்.