ஸ்கூட்டர் மீது கார் மோதி வாலிபர் உயிரிழப்பு
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு அடுத்த மனாலிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 19. இவரது நண்பர், வடகடும்பாடி பகுதியைச் சேர்ந்த சுனில். 18. இருவரும், மகேந்திரா சிட்டி பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 19ம் தேதி அதிகாலை வேலைக்குச் சென்று விட்டு, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் செங்கல்பட்டு நோக்கி, ஜி.எஸ்.டி., சாலையில் வந்தனர். ஸ்கூட்டரை, சுனில் ஓட்டி வந்தார். செங்கல்பட்டு அடுத்த பச்சையம்மன் கோவில் அருகிலுள்ள கடையில் டீ குடித்து விட்டு, மீண்டும் ஜி.எஸ்.டி., சாலையை ஸ்கூட்டரில் கடக்க முயன்றனர். அப்போது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற 'ஸ்விப்ட்' கார் மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி, சுனில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.