கந்த சுவாமி கோவிலில் தை கிருத்திகை விமரிசை
திருப்போரூர்:தை கிருத்திகையான நேற்று, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் குவிந்து கந்தசுவாமியை வழிபட்டனர்.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று, தை கிருத்திகை பிரார்த்தனைக்காக அமைச்சர் சேகர்பாபு உட்பட, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, சரவண பொய்கையில் நீராடி, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.கோவில் கிழக்குப்புறம் வட்ட மண்டபம் அருகே கற்பூரம், அகல் விளக்கு தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று, கந்தசுவாமியை வழிபட்டனர்.மாலையில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்த சுவாமி பெருமான், மாட வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கோவில் நிர்வாகம் சார்பில், ஒரு நாள் முழுதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் குவிந்ததால், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.