உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருமண மண்டபத்திற்கு அடிக்கல்

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் திருமண மண்டபத்திற்கு அடிக்கல்

திருப்போரூர் : திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் திருமணம் செய்ய வேண்டுதல் இருப்பதாலும், போக்குவரத்து வசதி இருப்பதாலும், திருப்போரூர் பகுதியில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கோவில் சார்ந்து தங்குவோருக்கு தங்கும் விடுதிகள், திருமணம் நடத்த மண்டபங்கள் இல்லாமல் இருந்தது.இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதி, திருமண மண்டபம், ஓய்வு அறை கட்டித்தர வேண்டும் என, பல ஆண்டுகளாக ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து, முதல் கட்டமாக, 2014ல் கோவில் அருகே திருப்போரூர் -- நெம்மேலி சாலையில், தன்னிறைவு திட்டம் மற்றும் கோவில் நிதியில் இருந்து, 2 கோடி ரூபாயில் திருமண மண்டபம், ஓய்வு விடுதி ஆகியவை கட்ட திட்டமிட்டு, கட்டுமான பணிகள் துவங்கின. கடந்த 2016ல் 90 சதவீதம் பணிகள் மட்டும் முடிக்கப்பட்டன.மீதமுள்ள பணிகள் ஐந்து ஆண்டுகளாக முடிக்காமல், கிடப்பில் போடப்பட்டது.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.பின், 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம், 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடுதி, 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் என, மொத்தம் 3.36 கோடி ரூபாயில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த, 2022 ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, விசாலமான கூடுதல் திருமண மண்டபம் கட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.அதாவது, பெரிய அளவில், 500 பேர் அமரும் வகையில், திருமண மண்டபம் கட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து, அரசிடம் பரிந்துரைத்தது.திருப்போரூர்- - திருக்கழுக்குன்றம் சாலை, தண்டலம் ஊராட்சியில் அடங்கிய எடையான்குப்பம் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் பரப்பு இடத்தில், திருமண மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் சொந்த நிதியில், 6.65 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது.இதையடுத்து, புதிய விசாலமான மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, நேற்று மேற்கண்ட இடத்தில் நடந்தது.

மண்டப அமைப்பு

திருமண மண்டபம் அமையும் வளாகத்தின் பரப்பு, 3.5 ஏக்கர். மண்டபம் மொத்த 24,195 சதுர அடி பரப்பில் 500 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில், மின்துாக்கி வசதியுடன் அமைகிறது. தரைத்தளத்தில், 13,733 சதுர அடி பரப்பளவில் உணவு சாப்பிடும் அரங்கம், சமையலறை ஆகியவை அமைகிறது. முதல் தளத்தில், 10,462 சதுர அடியில், திருமணக் கூடம், மணமக்கள் அறைகள், மணமக்கள் குடும்பத்தினர் தங்கும் வகையில், 16 அறைகள் அமைக்கப்படுகின்றன. மண்டப வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பில், வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை