உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருக்கழுக்குன்றம் கிரிவல பாதையில் மரக்கன்றுகள் வளர்ப்பு

 திருக்கழுக்குன்றம் கிரிவல பாதையில் மரக்கன்றுகள் வளர்ப்பு

திருக்கழுக்குன்றம், நவ. 27- திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் குன்றை ஒட்டியுள்ள காலியிடங்களில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. நான்கு வேதங்களே, வேதமலைக் குன்றுகளாக 3 கி.மீ., சுற்றளவில் வீற்று, ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி நாளிலும், முக்கிய உற்சவ நாட்களிலும், பக்தர்கள் மலைக்குன்றுகளை சுற்றி கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். இந்நிலையில், மலைக்குன்றுகளை ஒட்டியுள்ள காலியிடத்தை, பிறர் ஆக்கிரமிப்பதை தவிர்க்கவும், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக, சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், கோவில் நிர்வாகம் நாட்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் புவியரசு கூறியதாவது: கிரிவல பாதை பகுதியில், சுற்றுச்சூழலை மேம்படுத்த, வனத்துறை மூலம், நாவல், நீர்முல்லி உள்ளிட்ட ஒன்பது வகையான மரக்கன்றுகள் நடுகிறோம். முதல் கட்டமாக, 2,555 கன்றுகள் நட்டுள்ளோம். மேலும், 3,000 கன்றுகள் நட முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ