ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ் - ரே கருவி பழுதால் அவதி
அச்சிறுபாக்கம்,அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள 'எக்ஸ் - ரே' கருவி பழுதடைந்து உள்ளதால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 59 ஊராட்சிகளில், 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவ ர்களின் மருத்துவ வசதிக்காக, அச்சிறுபாக்கத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஐந்து மருத்துவர்கள், ஆறு செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும் ஐந்து முதல் 10 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. தினமும், 350க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், நெஞ்சு பகுதி மற்றும் தலைப்பகுதியை,'எக்ஸ் - ரே' எடுக்கும் கருவி, 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைக்கப்பட்டது. தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள், 'எக்ஸ் - ரே' வசதியை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த கருவி பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக, நோயாளிகள் அச்சிறுபாக்கம், மதுராந்தகம் பகுதிகளில் உள்ள தனியார் மையங்களில் எக்ஸ் - ரே எடுக்கும் சூழல் உள்ளது. இதனால், கூடுதல் செலவு ஏற்படுவதாக, நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அச்சிறுபாக்கம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், நவீன வசதிகளுடன் கூடிய, 'டிஜிட்டல் எக்ஸ் - ரே' கருவி பொருத்த, மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.