மழையில் நனைந்து வீணாகும் தேர் கொட்டகை அமைக்க வலியுறுத்தல்
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் புகழ் பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஏரி காத்தராமர் என அழைக்கப்படும், அருள்மிகு கோதண்டராமர் கோவில் உள்ளது.இக்கோவிலில் தேர்த்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வந்தது.இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, 2023-ல் பாலாலயம் செய்யப்பட்டு, கண்ணாடி அறைக்குள் சாமி வைக்கப்பட்டுள்ளது.தற்போது, உபயதாரர்கள் நிதியின் வாயிலாக, தேரின் மேல்மட்ட கொட்டகை 75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.தேரின் பாகமும் முழுதும் மரத்தால் வடிவமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றது.தற்போது பெய்து வரும் கோடை மழையின் காரணமாக, மூடப்பட்டுள்ள பிளாஸ்டிக் தார்பாய்கள் கிழிந்து வீணாகி உள்ளன.இதனால், தேரின் அடிபாகத்தில், சிறிய அளவிலான மர சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மர சிற்பங்கள், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.மேலும், திறந்தவெளியில் தேர்காட்சியளிக்கிறது. எனவே, தேரை சுற்றி, தென்னங்கீற்றால், கொட்டகை அமைக்க,கோவில்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.