பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன், காவலாளி அவசியம்
திருப்போரூர்:திருப்போரூரில், பள்ளி விடுதிக்கு தனி வார்டன், காவலாளி நியமித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் தங்கி படிக்க, அப்பள்ளி அருகே, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அரசு விடுதி உள்ளது. இதில் இரண்டு சமையலர்கள், ஒரு துாய்மை பணியாளர் பணி செய்து வருகின்றனர். ஆனால், விடுதிக்கு வார்டன் மற்றும் காவலாளி இல்லாத நிலையில், மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படிப்பதில்லை. பள்ளியிலிருந்து மதிய உணவுக்கு மட்டும், 50 மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த விடுதிக்கு தனி வார்டன் இல்லாத நிலையில், பாலுார் விடுதி வார்டன், இதை கூடுதலாக கவனிக்கிறார். இங்கு காவலாளியும் இல்லாததால், மாணவர்கள் அச்சப்படுகின்றனர். விடுதி அறைகள், சமையல் அறையின் தரைப்பகுதிகளும் சேதமடைந்துள்ளன. எனவே, விடுதியில் மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக, தனியாக வார்டன், காவலாளி நியமித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.