உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.6.36 கோடியில் திருமண மண்டபம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.6.36 கோடியில் திருமண மண்டபம்

திருப்போரூரில், கந்தசாமி கோவில் சார்பில் திருமண மண்டபம் அமைக்க, 6.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை அருகே முக்கிய ஆன்மிக தலமாக திருப்போரூர் விளங்குகிறது. ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், இங்குள்ள கந்தசாமி கோவில் பிரசித்தி பெற்றது.திருப்போரூர் மட்டுமின்றி, சென்னை சுற்றுப்புற பகுதியில் உள்ள முருக பக்தர்கள், இக்கோவில் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக, ஆண்டு முழுதும் திரள்கின்றனர். இத்தலத்தில் திருமணம் செய்வதாக வேண்டி, பக்தர்கள் திருமணமும் செய்து வருகின்றனர்.இங்குள்ள நெம்மேலி சாலை அருகே, கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான சிறிய திருமண மண்டபம் உள்ளது. பெரும்பாலும், தனியார் திருமண மண்டபங்களே அதிகளவில் உள்ளன.இச்சூழலில், பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, புதிதாக திருமண மண்டபம் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்து, நிதி ஒதுக்கி, ஒப்பந்தம் கோரியுள்ளது.திருக்கழுக்குன்றம் சாலை, தண்டலம் ஊராட்சி, எடையான்குப்பம் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், புதிய திருமண மண்டபம் அமைக்கப்பட உள்ளது.மேல்தளத்தில் 10,462 ச.அடி பரப்பளவில் திருமண அரங்கம், மணமகன், மணமகள் அறைகள், 10 தங்கும் அறைகள் ஆகியவை அமைகிறது. தரைத்தளத்தில், 13,733 ச.அடி பரப்பளவில் உணவு சாப்பிடும் அரங்கம், சமையலறை ஆகியவை அமைகிறது. மொத்த பரப்பளவு 24,195 ச.அடி. லிப்ட் வசதியும் உள்ளது.ஒரு ஏக்கருக்கும் மேல், வாகனம் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த திருமண மணடபம் கோவிலின் சொந்த நிதி, 6.36 கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி