பைக்கிலிருந்து விழுந்த பெண் இறந்ததால் வாலிபர் கைது
திருப்போரூர்:திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கடந்த 10ம் தேதி, செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்யகீதன், 26, என்பவரது பைக்கில் சென்றுள்ளார். அப்போது, கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே இளம்பெண், அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தகவல் அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். சத்யகீதன் நடந்ததை அவர்களிடம் கூற, ஆத்திரமடைந்த உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர் தலைமறைவானார்.பின், மேல் சிகிச்சைக்காக இளம்பெண்ணை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று இளம்பெண் உயிரிழந்தார்.இதையடுத்து உறவினர்கள், இளம்பெண் இறப்பிற்கு சத்யகீதன் தான் பொறுப்பு. அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்போரூர் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து திருப்போரூர் போலீசார், பைக்கை அஜாக்கிரதையாக இயக்கி விபத்து ஏற்படுத்தியதால் இளம்பெண் இறந்துள்ளார் என, சத்யகீதனை கைது செய்து, அவரிடம் விசாரிக்கின்றனர்.