மணலி, மணலியில், வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 30,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மணலி, விமலாபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் நாராயணன், 42; பாரிமுனையில் உள்ள, கப்பல் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.கடந்த ஜூலை 27ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு, குடும்பத்துடன் சென்றார்.நேற்று முன்தினம் இரவு, திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், 30,000 ரூபாய் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரிந்தது.அதிர்ச்சியடைந்த நாராயணன், மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆவடி கைரேகை நிபுணர் பிரிவு உதவி ஆய்வாளர் நாகேந்திரன் தலைமையிலான குழு, கொள்ளை போன வீட்டில், கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.