| ADDED : ஆக 22, 2024 12:09 AM
சென்னை சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள், மூன்று வழித்தடங்களில் 69,180 கோடி ரூபாய் செலவில், 116 கி.மீ., நீளத்திற்கு நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும், வரும் 2028ம் ஆண்டுக்குள் முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, சிறுசேரி - கிளாம்பாக்கம்; பூந்தமல்லி - பரந்துார்; கோயம்பேடு - ஆவடிக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பது குறித்து, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது.அந்த வகையில், பூந்தமல்லி - பரந்துார்; கோயம்பேடு - ஆவடி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அடுத்தகட்டமாக, மேற்கண்ட இந்த இரண்டு வழித்தடங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 4.80 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:பூந்தமல்லி - பரந்துார் 44 கி.மீ; கோயம்பேடு - ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக 16 கி.மீ., மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மெட்ரோ ரயில் நிலைய பகுதிகள், சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்களின் அமைவிடங்கள், அதன் வடிவமைப்பு, பயணியருக்கான வசதிகள் உள்ளிட்ட விபரங்கள் ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.