1 வயது குழந்தையின் மூளை கட்டி அகற்றம்
சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள், 1 வயது குழந்தையின் மூளையில் ஏற்பட்டிருந்த உறைக்கட்டியை அகற்றி, மறுவாழ்வு அளித்துள்ளனர்.மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை இயக்குநர் ரூபேஷ் குமார் கூறியதாவது:வங்கதேச நாட்டைச் சேர்ந்த 1 வயதான குழந்தையின் மூளையில் உறைக்கட்டி உருவாகி இருந்தது. இதனால், தொடர்ச்சியாக வாந்தி, பசி உணர்வின்மை மற்றும் சுய நினைவு இழப்பால் அக்குழந்தை பாதிக்கப்பட்டது.பொதுவாக மூளை கட்டிகள் தீங்கற்றவை; ஆனால் வளரக்கூடியவை. மூளை மற்றும் தண்டுவடத்தை சுற்றி மென்படலத்தில் இருந்து வளருவதால், பல்வேறு திசுக்களை அழுத்தி, பிரச்னையை ஏற்படுத்துகிறது. இக்குழந்தை ஏழு மாதத்தில் இருந்து, இவ்வகை பாதிப்பை சந்தித்து வருகிறது. மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும்போது சிறிய ரத்த இழப்பு ஏற்பட்டாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படும்; உடல் ஊனத்தையும் ஏற்படுத்தக்கூடும்.எனவே, மருத்துவமனையில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி, நரம்பு மண்டல செயலியல் கண்காணிப்புடன், அறுவை சிகிச்சை செய்து, கட்டி அகற்றப்பட்டது. தற்போது, அக்குழந்தை நலமுடன் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.